நாளை முதல் பி.இ. விண்ணப்பங்கள் வினியோகம்
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 333 சுயநிதி கல்லூரிகள். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 10 உள்ளன. 11 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆகும்.
இவற்றில் மொத்தம் 1.35 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 85,000 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
இந்த ஆண்டு 140 புதிய கல்லூரிகள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதில் அங்கீகாரம் பெறும் கல்லூரிகளும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையில் இடம் பெறும். இதனால் மேலும் 25,000 இடங்கள் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 1.40 லட்சம் விண்ணப்பப் படிவங்கள் அச்சிடப்பட்டன. இந்தாண்டு 10 சதவீத விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சிடப்படவுள்ளன.
இந்த விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் இம்மாதம் 30ந் தேதி வரை விற்பனை செய்யப்படும்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் 58 மையங்களில் இவை விற்பனை செய்யப்படும். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்களைப் பெற முடியாது. அதேபோல தேர்தலை முன்னிட்டு 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விற்பனை இருக்காது.
மாணவர்கள் தபால் மூலமும், இன்டெர்நெட்டில் டவுன்லோடு செய்தும் விண்ணப்பங்களை பெறலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 கவுண்டர்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை 31ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பி.ஆர்க் படிப்பிற்கான விண்ணப்பப் படிவங்கள் எப்போது வினியாகிக்கப்படும் என்பதை பின்னர் அறிவிப்போம்.
ஜூன் மாதம் 20ம் தேதி வாக்கில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு மருத்துவ கவுன்சிலிங் முடிந்ததும் பொறியியல் கவுன்சிலிங் துவங்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.250. விண்ணப்பத்திற்கான தொகையை பணமாகவே கொடுக்கலாம். தபாலில் பெறுவோர் ரூ.200 கூடுதலாக டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும் என்றார்.