அதிகரிக்கும் தேர்தல் புறக்கணிப்பு-அதிகாரிகள் அதிர்ச்சி
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் நெல்லையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் பொது மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளது, அங்கிருக்கும் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை அதிபர்கள் செல்லையா பிள்ளை, சண்முகையா, ராமசாமி, மயிலேறி, மதிவாணன், வைகுண்டராஜா, சீனி வைத்தியலிங்கம் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
30 ஆயிரம் குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்கும்...
இது தொடர்பாக அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில்,
அரிசி ஆலையில் தயார் செய்யப்படும் அரிசிகளை அதிகாரிகள் ரேசன் அரிசி என கூறி பறிமுதல் செய்கிறார்கள். இதனை உடனே நிறுத்த வேண்டும். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகளை விருதுநகர், ஸ்ரீவி்ல்லிபுத்தூரில் வேண்டும் என்றே பறிமுதல் செய்து வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம். எங்களுடன் சேர்ந்து 30 ஆயிரம் ஊழியர்கள் குடும்பத்தினரும் புறக்கணிப்பார்கள் என்றனர்.
சாமி கும்பிடவிடுங்க... இல்லைனா...
இதே போல செங்கோட்டை அருகேயுள்ள கட்டளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், நாங்கள் வழிபட்டு வந்த குற்றாலநங்கை அம்மன், பிள்ளையார், கருப்பசாமி, சுடலைமாடன், பட்டவராயன் ஆகிய சுவாமிகளை மீண்டும் வழிபட அனுமதி்க்க வேண்டும். தற்போது அந்த கோயிலுக்கு ஒரு சமுதாயத்தினர் மட்டுமே சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
எனவே அந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட அனைவரும் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து விடுவோம் என்றனர்.
சுடுகாட்டை மீட்டு தாருங்கள்...
இதே போல முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் காமராஜர் நகர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில் எங்கள் ஊருக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அதை மீட்டு தர வேண்டும். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து விடுவோம் என்றனர்.
இப்படி தொடர்ந்து பலரும் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக மனு கொடுத்து வருவது அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.