கட்சிகள் மீதான கோபத்தை வாக்குகள் மூலம் காட்டுங்கள் - விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாத கட்சிகள் மீதான உங்களது கோபத்தை வாக்குகள் மூலம் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை தொகுதி தேமுதிக வேட்பாளர் கவியரசுவை ஆதரித்து நேற்று வண்டியூர், அய்யர் பங்களா, சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க., கடந்த 10 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுடனும், தற்போது காங்கிரசுடனும் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. அவர்கள் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள்? முல்லை பெரியாறு அணையில் 10 அடி தண்ணீரை உயர்த்தினார்களா?

கடந்த முறை போல மீண்டும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்தால் நெல், கரும்புக்கு நல்ல விலை கிடைக்க வலியுறுத்துவேன் என்று கூறுகிறார் கருணாநிதி. ஏன் கடந்த 10 ஆண்டுகளில் அதனை செய்யவில்லை?

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தன்மானமுள்ள விவசாயிகள் மானம் போய் விடுமே என கருதி குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி விட்டனர். ஆனால் விவசாயிகள் என்று கூறி கடன் வாங்கிய தி.மு.க. வட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கடனை செலுத்தாமல் அரசு தள்ளுபடி செய்ததில் அதிக அளவு பயன் அடைந்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த முட்டுக்கட்டை போட்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் தற்போது உங்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்டுகள் தானே ஆட்சி செய்கிறார்கள். இங்குள்ள கம்யூனிஸ்டுகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து இருக்கலாமே?

அதைப்போலவே உங்களிடம் ஓட்டு கேட்கும் பாரதீய ஜனதா கட்சியினர் அவர்களது ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் விடும்படி கூறி இருக்கலாமே?

நான் காசுக்கு ஆசைப்பட்டு இருந்தால் எப்படியோ இருந்திருப்பேன். கூட்டணி அமைத்திருப்பேன். இந்த விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத்தேடி வந்துள்ளேன்.

திமுக தருவது பாவப் பணம்...

பிரசாரத்துக்கு விஜயகாந்த் வரப்போகிறான் என்று தெரிந்தவுடன் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் ஒரே நாளில் 26 கோடி ரூபாய் தந்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கினால் அவர்கள் செய்த பாவம் நம்மை சேரும். தலையை சுற்றி அந்த பணத்தை வீசி எறியுங்கள். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் காசு கொடுத்து கேட்கிறார்கள்.

பணம் கொடுப்பது தெரிந்தும் போலீசாரும், அதிகாரிகளும் அவர்களுக்கு கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். உடலுக்கு ரத்தம் எவ்வளவு முக்கியமோ அது போல் வாழ்க்கைக்கு மின்சாரம் முக்கியம். தற்போதைய மின்சார தட்டுப்பாட்டுக்கு மாறி மாறி ஆட்சி செய்த கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் காரணம்.

தொலை நோக்கு பார்வையில் மின்திட்டங்களை அப்போது செய்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது. கிராம மக்களுக்கு போதிய அளவு சுகாதார வசதி இல்லை. பாம்பு கடித்து ஆஸ்பத்திரிக்கு சென்றால் அங்கு நர்சு மட்டும் தான் இருக்கிறார். டாக்டர் இருப்பது இல்லை.

ஓட்டு மட்டும் போடுங்கள் என கூறும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் மேலூரில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை திறந்தார்களா? 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலை என்ன ஆனது?

மக்களிடையே தற்போது மவுன புரட்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சியை மாற்றி அமைப்பார்கள். காட்சிகள் மாறும். முறையாக திட்டங்களை நிறைவேற்றாத அ.தி.மு.க., தி.மு.க.வினர் மீது ஆத்திரப்படாதீர்கள். அவர்கள் மீதான கோபத்தை ஓட்டு போடும்போது காட்டுங்கள்.

இலங்கை போரை நிறுத்த சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் உண்ணாவிரதத்தை நடத்துகிறார்கள். இலங்கை தமிழரை காப்பாற்ற ஐ.நா. சபைக்கு தந்தி கொடுத்தது தே.மு.தி.க. தான் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+