ராஜபக்சேவின் 'டிராமா' கூட்டம்-தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பு
கொழும்பு: தமிழர் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ராஜபக்சேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசி அவர்களுடன் இணைந்து செயற்படுவது போல உலகத்துக்குக் காட்டிக்கொள்ள ராஜபக்சே முயல்கிறார். எனவேதான் அதில் கலந்து கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இடம் பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நேற்று கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்து விட்டது. நேற்று காலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் கூறுகையில்,
வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுடைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. தமிழ்க் கட்சிகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் இதில் கலந்துகொண்டன.
இந்தக் கூட்டத்தில் பிரதிநிதிகள் குழு ஒன்றை வவுனியாவுக்கு அனுப்பி நிலைமைகளைப் பார்வையிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் வவுனியா செல்ல முடியாது என்பதால் அதற்கான அனுமதியை அதிபரைச் சந்தித்துப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியிலேயே அதிபரை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோரும் கடிதம் ஒன்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளால் அனுப்பிவைக்கப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே அதிபரின் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
வவுனியாவுக்குச் செல்வதற்கு ராணுவத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதால் இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இருந்தபோதிலும் வவுனியா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டால் அந்தக் குழுவுடன் இணைந்து செல்வதற்கு கூட்டமைப்பு தயாராகவுள்ளது.
வவுனியாவில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்க் கூட்டமைப்பு அக்கறையாக உள்ளது. அதனால்தான் அரசு சார்பற்ற நிறுவனத்தினால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களும் கலந்துகொள்ளும் என்பதை அறிந்திருந்தும் அதில் நாங்கள் கலந்துகொண்டோம்.
ஆனால், இன்றைய (நேற்று நடந்தது) கூட்டம் வெறுமனே போக்குவரத்து முறைப்படுத்துதல் மற்றும் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. அங்குள்ள நிலமைகளை நாம் நேரடியாகப் பார்க்காமல் அங்குள்ள மக்களுடைய பிரச்சினைகளை நாம் பேச முடியாது. ஏனெனில் அங்குள்ள நிலைமைகள் பற்றி சரியான தகவல்கள் எங்களிடம் இல்லை.
அத்துடன், இன்றைய நிலையில் அரசாங்கம் தன்னுடைய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படாமல் உள்ளது. அனைத்துலக சமூகத்துக்கு, ஐ.நா. சபைக்கு, கொழும்பு வந்து அரசுடன் பேசிய வெளிநாட்டுப் பிரமுகர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்றவில்லை.
இந்நிலையில் அதிபரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications