தீவிரவாதத்தை ஆதரிக்கும் அதிமுக கூட்டணி-ப.சி

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அவர் திருப்பத்தூரில் பிரச்சாரத்தில் பேசுகையில்,
இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சியை அமைக்கும். எங்களுக்கு தகுதி இருக்கிறது என நினைப்பவர்கள் வாக்களியுங்கள்.
நாட்டில் உள்ள 542 தொகுதிகளில் 470 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 23 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, மத்தியில் ஆட்சி அமைப்பது என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது.
இந்க்த கணக்கு ஜெயலலிதாவுக்கு தெரியும். என்னைவிட கணக்கில் அவர் புலி. அவருக்கு தெரியும், ஆட்சி அமைக்க முடியாது என்று. அவருடைய நோக்கம் மூன்றாண்டு திமுக, ஆட்சியை கவிழ்ப்பதே.
தமிழக அரசைக் கைப்பற்ற திட்டமிடுகிறார். அதற்கான நாடக ஒத்திகையாகத்தான் அவருக்கு லோக்சபா தேர்தல் உள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின் அவரது கூட்டணியில் தற்போதுள்ளவர்கள் இருப்பார்களா?, சந்தேகம் தான்.
1998ல் அதிமுக, கூட்டணிக்கு பெரிய வெற்றி தந்தீர்கள். வாஜ்பாய் ஆட்சி அமைந்தது. அதிமுக, அமைச்சரவையில் பங்கேற்றது. 13 மாதங்களில் அதிமுக, ஆதரவு வாபஸ் வாங்கி வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தது. மக்கள் அளித்த ஆதரவை துஷ்பிரயோகம் செய்தவர் தான் ஜெயலலிதா.
பாஜகவின் தோல்விக்கு காரணம் அவர்கள் பெருநகரங்கள், வியாபாரிகளுக்காக ஆட்சியை நடத்தியதுதான். அந்த தவறை நாங்கள் செய்யவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ. 50,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உட்பட அடிப்படை தேவை, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரூ. 1க்கு 1 கிலோ அரிசி, திருமண உதவித்திட்டம் ஆகியவற்றை மாநில அரசு நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் தேர்தலில் கவலை தரும் விஷயம். கருத்து வேறுபாடுகளை கடந்து பண்புடன், நாகரீகத்துடன் நடப்பதை ஜெயலலிதா மறந்ததுதான். நரை, திரை அனைவருக்கும் வரும். நலமில்லாதவர்களை நலமடைய வாழ்த்துவது மரபு. மருத்துவமனையில் ஒளிந்துள்ளார் கருணாநிதி என்பது போன்ற பண்பற்ற வார்த்தைகள் பலவற்றை ஜெயலலிதா பேசுகிறார்.
ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்...
அந்த வார்த்தைகளை ஜெயலலிதா திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். 20 ஆண்டுகளாக தீவரவாதம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது தலையெடுக்க முயல்கிறது.
சில நாட்களுக்கு முன் எல்லையில் 60 டிகிரி குளிரில், சிறுநீர் கழிக்கக் கூட முடியாத நிலையில் பணியாற்றும் ராணுவத்தினரை, குடும்ப வாழ்க்கையை துறந்து நாட்டிற்காக வாழும் ராணுவத்தினரை ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியுள்ளது. இவர்களுக்கு யார் தைரியம் தந்தது?. நக்சலைட்டுகள், தீவிரவாதிகளுக்கு யார் தைரியம் தந்தது?.
மீண்டும் தமிழ்நாட்டில தலையெடுக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவைத் தருவது அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் தான்.
இந்த தீய சக்திகள் மீண்டும் தலையெடுத்தால் 20 ஆண்டு தொழில், கல்வி, மருத்துவ வளர்ச்சி போய், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications