திருவாரூர் கலெக்டர்-மதுரை கமிஷனர் அதிரடி மாற்றம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சந்திரசேகரனின் செயல்பாடு சரியில்லாததால் அவரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து விட்டது.
திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த சந்திரசேகரன். இவரது செயல்பாடு தேர்தல் ஆணையத்திற்கு அதிருப்தி ஏற்படுத்தியது. செயல் திறமின்மை மிக்கவராக அவர் காணப்படுவதால் அவரை மாற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து சந்திரசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். அவருக்குப் பதில், மகளிர் மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குநர் உதயசந்திரன் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவராகியுள்ளார்.
மதுரை கமிஷனரும் மாற்றம்:
அதே போல மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனை மாற்ற தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து நந்தபாலன் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
மதுரை தொகுதியில், சரமாரியாக வாக்காளர்களுக்குப் பணம் தரப்படுவதாகவும், ரவுடிகளை வைத்து எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாகவும் குவிந்த புகார்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நந்தபாலனை மாற்ற வேண்டும் என மதுரையில் மு.க.அழகிரியை எதிர்த்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஏகப்பட்ட புகார்கள் போயின.
இந்த நிலையில் நந்தபாலனை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று இரவே நந்தபாலன் மாற்றப்பட்டார். அவரை சென்னைக்கு அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உள்ள காவல்துறை அகாடமியின் ஐஜியாக நியமித்துள்ளனர்.
புதிய போலீஸ் கமிஷனராக தற்போது காவல்துறை அகாடமியின் ஐஜியாக உள்ள ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பணியில் சேருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications