அதிமுகவுக்கு எங்கள் கதவு திறந்திருக்கிறது-காங்
இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நிருபர்களை சந்தித்த அவர்,
திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் மிக பிரம்மாண்டமான பிரச்சார தேர்தல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முதல்வரின் உடல்நலம் தேறி வருகிறது என்றும், இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல்வரை சந்தித்து நான் உடல்நலம் விசாரித்தேன். அப்போது முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டேன். இன்னும் ஓரிரு நாட்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், பொதுக் கூட்டத்தில் பேசும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சோனியாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதல்வர் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால் சோனியா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று புதுவையில் நடைபெறு வதாக இருந்த சோனியாவின் பிரச்சார கூட்டமும் தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.
கேள்வி: பாதுகாப்பு காரணத்திற்காக அவர் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதா?
குலாம் நபி: முதல்வர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த காரணமும் இல்லை.
கேள்வி: இதனால் திமுக கூட்டணி பிரச்சாரத்தில் பின்னடைவு ஏற்படுமா?
குலாம நபி: எந்த பின்னடைவும் ஏற்படாது. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
கேள்வி: தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளிப்பார்கள் என்று ராகுல் கூறியிருக்கிறாரே?
குலாம் நபி: மதச்சார்பற்ற சக்திகள், ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எப்போதும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் உறுதியான கருத்து. அதன் அடிப்படையில் ராகுல் அப்படி கூறியிருப்பார்.
அதிமுகவுக்கு கதவு திறந்திருக்கிறது..
கேள்வி: அதிமுக போன்ற சக்திகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்றும் ராகுல் கூறியிருக்கிறாரே?
குலாம் நபி: மதச்சார்பற்ற எந்தக் கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவு தரலாம், எங்கள் கதவு திறந்தே இருக்கிறது.
கேள்வி: இந்த கருத்தால் திமுக கூட்டணியில் பாதிப்பு எதுவும் ஏற்படாதா?
குலாம் நபி: எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார். அவருடன் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோரும் உடனிருந்தனர்.
குலாம் நபியின் இந்தப் பேச்சின்மூலம் அதிமுகவுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயார் என்பது தெளிவாகிறது. இதனால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.