மலேசியா-அடைத்து வைக்கப்பட்ட தமிழ் சிறுமி மீட்பு
கோலாலம்பூர்: மலேசியாவின் புச்சோங் நகரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர்.
கடந்த வாரம் இதேபோல அடைத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்ட தமிழ்ச் சிறுவன் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளாள்.
சலோமியா பிரேம்குமார் என்ற அந்தச் சிறுமியின் சித்தி பாரீஸில் உள்ளார். சலோமியாவின் தாயார் தங்கமலர். தந்தை பிரேம்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஈழத்தில் நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருவதால், தனது ஒரே மகளை பாரீஸில் உள்ள தனது தங்கையிடம் சேர்ப்பிக்க முடிவு செய்து, கொழும்பில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்ட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
ஆனால் அந்த டிராவல் ஏஜென்ட் பாரீஸுக்கு அனுப்புவதற்குப் பதில் சலோமியாவை மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்ட சலோமியா, புச்சாங் நகரில் உள்ள சாந்தி என்பவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டாள். அதே வீட்டில் இலங்கையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தில்ருக்ஷனும் அடைத்து வைக்கப்பட்டிருந்தான்.
சாந்தியும், அவரது மைத்துனரும் சேர்ந்து, இந்த சிறார்களை கொடுமைப்படுத்தியுள்ளனர். அடித்து சித்திரவதை செய்து வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளனர். சரியாக சாப்பாடும் தரப்படுவதில்லை.
இந்த நிலையில், கடந்த வாரம் தில்ருக்ஷன் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மோகனுக்கு தொலைபேசி மூலம் தனது நிலையைத் தெரிவித்தான்.
இதையடுத்து மோகனின் நடவடிக்கையின்பேரில் போலீஸார் விரைந்து சென்று தில்ருக்ஷனை மீட்டனர். நேற்று முன்தினம் சலோமியாவை மீட்டனர்.
இதுகுறித்து மோகன் கூறுகையில், சலோமியாவின் தாயாருக்கு தனது மகள் மலேசியாவுக்கு வந்தது தெரியுமா என்று தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.
சாந்தியும், அவரது மைத்துனரும் சேர்ந்து சலோமியா மற்றும் தில்ருக்ஷனை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சரியாக சாப்பாடும் தராமல், வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களாக இரு சிறார்களும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர். தற்போது சாந்தியும், அவரது மைத்துனரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இரு சிறார்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பபப்ட்டுள்ளனர். அவர்கள் நல்ல நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இருவரும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பராமரித்து வருகிறது. மீண்டும் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இனப்பிரச்சினையில் சிக்கி பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழ் மக்களிடம், மலேசியாவைச் சேர்ந்த சக தமிழர்களே இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. இப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மோகன்.












Click it and Unblock the Notifications