குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 100 பவுன் நகை கொள்ளை
சென்னை: சென்னையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருந்த தாய், மகளை மிரட்டி அறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டுத் தப்பினர்.
ஆழ்வார் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி லதா (50). இவர்களது மகள் சத்யா (25). நேற்று இரவு 8.30 மணி அளவில் இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். சத்யாவின் 3 வயது மகன் ரோஜன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது 4 பேர் வந்துள்ளனர். கதவைத் தட்டினர். லதா போய் கதவைத் திறந்தார். அப்போது அவரை உள்ளே தள்ளிக் கொண்டு அந்த நான்கு பேரும் வீட்டுக்குள் புகுந்தனர்.
அந்தக் கும்பலில் இருந்த ஒருவன், குழந்தை ரோஜனை கையில் தூக்கி வைத்துக் கொண்டான். பின்னர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து ரோஜனின் கழுத்தில் வைத்து கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளோம். சத்தம் போட்டு ஊரை கூட்ட நினைத்தால் குழந்தையை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான்.
பின்னர், மற்ற 3 பேரும் லதாவையும், சத்யாவையும் தனி அறையில் வைத்துப் பூட்டினர். பின்னர் குழந்தையை தங்கள் கையில் கத்தி முனையில் வைத்தபடி வீட்டில் இருந்த பீரோக்களின் சாவிகளை கேட்டு வாங்கினர்.
பின்னர் சாவாதனமாக பீரோவைத் திறந்து 100 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு குழந்தையை விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.