போட்டியிலிருந்து விலகுமாறு மாறன் தரப்பு கோரியது-ஹைதர் அலி

இதுகுறித்து அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தயாநிதி மாறனின் கூட்டாளிகள் சிலர் என்னை அணுகி இங்கு போட்டியிட வேண்டாம். தொகுதியை விட்டு மாறி விடுங்கள். அதற்குத் தேவையான பணத்தை நாங்கள் பெற்றுத் தந்து விடுகிறோம் என்று அவர்கள் கூறினர்.
மத்திய சென்னை தவிர வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அதற்கான செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன்.
தயாநிதி மாறனால் மத்திய சென்னையில் வெற்றி பெற முடியாது. நாங்கள் மக்களோடு இணைந்து பழகக் கூடியவர்கள். ஆனால் மாறன் அப்படி அல்ல. சொந்தக் கட்சியினரிடம் கூட நெருங்கிப் பழகாதவர் மாறன். அப்படி இருக்கையில், எப்படி மக்களுடன் அவர் நெருக்கமாக இருக்க முடியும்.
தயாநிதி மாறன் கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற முக்கிய காரணமே தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரின் உழைப்புதான். எங்களது ஆதரவுடன்தான் கடந்த தேர்தலில் அவர் வென்றார்.
ஆனால் மத்திய சென்னை தேர்தல் முடிவு அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறது. திமுக தலைவர்களின் குடும்பப் பிரச்சினைகள் நாடு முழுவதும் தெரிந்து விட்டன. மக்கள் அவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டு விட்டனர்.
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பு திமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கூறியுள்ளது. இதன் மூலம் திமுக, முஸ்லீம் வாக்களர்களை விட்டு மேலும் விலகி விட்டது.
மத்திய சென்னையி்ல் 30 சதவீத வாக்காளர்கள் முஸ்லீம்கள்தான். தெளஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தந்திருப்பதும் நல்லதுதான். இதன் மூலம் பெரும்பாலான முஸ்லீம்களின் வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.
தற்போது மக்களின் மன நிலை திமுகவுக்கு எதிராக உள்ளது. அதேசமயம், முஸ்லீம்களைப் பொறுத்தவரை திமுக வேண்டாம் என நினைத்தால் அதிமுகவுக்குத்தான் அளிப்பார் என கருதத் தேவையில்லை. அந்த வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.
தமிழக மக்கள் மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. தங்களுக்காக யார் உழைப்பார்களோ அவர்களுக்கே வாக்களிப்பார்கள் என்றார் ஹைதர் அலி.












Click it and Unblock the Notifications