ஊழல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ், திமுக உறவு-பிரகாஷ் கரத்
கோவை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் வெளியேறிவிட்ட நிலையில், ஊழல் ஆதாயத்திற்காகத்தான் காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஒட்டிக் கொண்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் பிரசாரம் செய்தார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜகவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியும் காப்பி அடித்து விட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதிலிருந்து இந்த இரு கட்சிகளும் பின்பற்றும் கொள்கைகள் ஒன்று தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
காங்கிரஸ் கட்சியோடு இருந்த கட்சிகள் எல்லாம் அதை விட்டு விலகி எதிர்த்துப் போட்டியிடுகின்றது. காங்கிரஸ் கட்சியோடு தற்போது ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதில் ஊழல் நடக்கவில்லை, சட்டப்படிதான் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் ப.சிதம்பரம் நற்சான்று வழங்கியுள்ளார்.
பிராந்தியக் கட்சிகளுக்கு தேசியக் கண்ணோட்டம் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தற்போது கூறுகிறார். இதுவரை பிராந்தியக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்துவிட்டு தற்போது அந்த கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.
இந்திய ஜனநாயகத்தில் மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து மாற்றுக் கொள்கை அடிப்படையிலான ஒரு அணியை உருவாக்குவோம். மக்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றி அக்கறை கொள்ளக்கூடிய ஒரு நாடாளுமன்றத்தையும், புதிய அரசையும் உருவாக்குவோம் என்றார் பிரகாஷ் கரத்.












Click it and Unblock the Notifications