சென்னை தலைமைச் செயலகத்தில் தீவிபத்து - ஆபத்தில்லை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் இதில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காமல் தப்பி விட்டன.
கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக பழைய கட்டடத்தின் 3வது மாடியில் பொதுத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏழே முக்கால் மணியளவில் திடீரென புகை வந்தது.
இதையடுத்து வாட்ச்மேன் ராமசாமி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
தலைமைச் செயலக வளாகத்திலேயே ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் தயார் நிலையில் இருப்பது வழக்கம். அந்த வண்டி வேகமாக விரைந்து வந்து தீயை அணைத்தது.
இந்த வண்டி தவிர மேலும் ஐந்து வண்டிகளும் வந்து தீயை அணைத்தன. அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை. சாதாரண எழுதுபொருட்கள் மட்டுமே கருகின.
மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications