திமுகவுடன்தான் இப்போதும் கூட்டணி, தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி: ஆசாத்
புதுச்சேரி: திமுகவுடன்தான் தேர்தலுக்கு முன்பும் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னரும் இது தொடரும். அதிமுகவுடன் காங்கிரஸுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் குலாம் நபி ஆசாத். அப்போது அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்துள்ளது. தமிழர்களுக்கு உரிய நிவாரணம், உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
முதல்வர் கருணாநிதியும் இதே எண்ணத்தில் தான் செயல்பட்டுள்ளார். இலங்கை பிரச்சினை நிச்சயம் தேர்தலை பாதிக்காது. மக்கள் இலங்கை பிரச்சினையை ஒதுக்கி விட்டு தேர்தலை மட்டும் பார்க்க வேண்டும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என்று 100 சதவீதம் நம்புகிறோம். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் நன்றாக உழைக்கின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலை போல மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றனர்.
திமுகவுடன் நல்ல உறவு உள்ளது..
அ.தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை. தி.மு.க.வுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியும், தி.மு.க.வுடன்தான். இரு கட்சிகளுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. எனவே தேர்தலுக்கு பின்பும் இதே கூட்டணி தொடரும்.
சென்னை கூட்டம் பதில் சொல்லும்...
சென்னையில் வருகிற 10-ந் தேதி 3.30 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் பேசுகின்றனர். இந்த கூட்டம், மீடியாக்கள் மூலம் எழுந்த பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் வகையில் அமையும்.
இலங்கை பிரச்சினையில் நாட்டின் வெளியுறவு கொள்கை தவறாக உள்ளது என்று அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை நிலவரம் கடந்த 20 ஆண்டுகளாக இதே போன்றுதான் உள்ளது.
எங்கள் வெளியுறவு கொள்கை தவறாக இருந்தால் அத்வானி துணை பிரமராக இருக்கும் போது அதை ஏன் திருத்தவில்லை? இலங்கை பிரச்சினையில் பாரதீய ஜனதா கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது.
மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும்...
நாட்டின் ஸ்திரத்தன்மை மாறாமல் இருக்க மதச்சார்பற்ற ஆட்சி அமைய மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். தேர்தலுக்கு பிறகு காங்கிரசை ஆதரிப்பது பற்றி இடதுசாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.