ஆனந்துக்கு 6வது முறையாக செஸ் ஆஸ்கர் விருது
டெல்லி: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த 6வது முறையாகவும், தொடர்ந்து 2வது முறையாகவும் செஸ் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த 64- செஸ் ரிவியூ என்ற செஸ் இதழ் ஒன்று சிறந்த செஸ் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் செஸ் ஆஸ்கர் விருது வழங்கி வருகிறது.
இம்முறை இவ்விருதுக்கு தற்போது பிடே தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பல்கேரியாவின் வாசலின் டபலோவுக்கும், இந்தியாவின் முதல் செஸ் கிராண்டமாஸ்டர் என்ற பெருமைக்குரியவரான விஸ்வநாதன் ஆனந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இறுதியில் ஆனந்த் விருதுக்குத் தேர்வானார்.
அஜர்பெய்ஜனில் நடக்கும் பிரசிடென்ட் கோப்பை தொடரில் பங்கேற்ற சென்றுள்ள ஆனந்துக்கு அங்கு இந்த விருதை பிடே தலைவர் கிர்ஜன் இலும்சினோவ் வழங்கினார்.
இது ஆனந்த் கைப்பற்றும் 6வது செஸ் ஆஸ்கர் விருதாகும். முன்னதாக 1997, 1998, 2003, 2004, 2007 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார்.
மேலும் இந்த விருதை ஐந்து முறைக்கு மேல் வென்ற ரஷ்யாவை சாராத முதல் வீரர் என்ற சாதனையையும் ஆனந்த் படைத்துள்ளார்.
அதிகபட்சமாக இந்த விருதை ரஷ்யாவின் காரி காஸ்பரோவ் 11 முறை வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications