ஜெ. கைகாட்டுபவர் தான் அடுத்த பிரதமர்-அன்புமணி
மதுராந்தகம்: ஜெயலலிதா யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக வருவார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
மதுராந்தகத்தில் அவர் பேசுகையில்,
முன்பு சாராயம் தனியாரிடம் இருந்தது. கல்வி அரசிடம் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கல்வி தனியாரிடம் இருக்கிறது. சாராயம் அரசிடம் உள்ளது.
எங்களுக்கு இலவசம் என்று எதுவும் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள். இலவச மின்சாரம் கொடுங்கள். வேலை வாய்ப்பு கொடுங்கள். இவை போதும். வேறு எந்த இலவசமும் வேண்டாம்.
ஒரு ரூபாய் அரிசியை கோழிக்கு போட்டால் அவை கூட சாப்பிடுவதில்லை என்று நாமக்கல்லில் கூறுகிறார்கள். விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை இல்லை. மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இல்லாத அரசுதான் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த தேர்தல் நியாயமாக, ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை பற்றி ஐநா, அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகள் இலங்கையை கண்டிக்கின்றன. கவலைகொள்கின்றன. ஆனால் இந்தியா மட்டும் அமைதியாக மவுனம் சாதிப்பது ஏன்?
தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமராக வருவார். எனவே ராமகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அன்புமணி ராமதாஸ்.