நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது - ஜெ.
சென்னை: வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, பல்லாவரம் கண்டோன்மெண்ட் மைதானத்தில் நேற்று மாலை ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
ஜெயலலிதா பேசுகையில்,
ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?.
பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார்.
திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாக திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளது; தீவிரவாதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, தி.மு.க. தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இந்திய நாட்டின், தற்போதைய பின்தங்கிய நிலைக்கும், பெருகி வரும் தீவிரவாதத்திற்கும், தி.மு.க.வும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
எனது ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அம்பத்தூர் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்பத்தூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அம்பத்தூர் ஏரியை தூர்வாரி, சீர்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போரூர் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாம்பரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டு வருவதன் காரணமாக, எனது ஆட்சிக்காலத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தி.மு.க. அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
பின்னர் திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து ஆவடியில் நடந்த கூட்டத்திலும் பேசினார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து வட சென்னை சிபிஐ வேட்பாளர் தா.பாண்டியனை ஆதரித்து வியாசர்பாடியில் பேசினார்.












Click it and Unblock the Notifications