3வது அணி பிரதமர்: பாஜக-காங் கவலைபட வேண்டாம்-சிபிஎம்
திருச்சி: பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மூன்றாவது அணியின் பிரதமர் யார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அது பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதை மூன்றாவது அணி முடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாற்று அரசு உருவாவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ஒரு மாற்றுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அந்த மாற்றுக் கொள்கை மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு இந்தியாவில் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மூன்றாவது அணியால்தான் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தான் காரணம். மத்தியில் அமையப் போகும் புதிய அரசு, பொருளாதார கொள்கை, மதவாத-தீவிரவாதத் தடுப்பு, சமூக நீதிக்கான புதிய கொள்கை, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகிய 4 முக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும்.
அதே போன்று, தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த பிறகே பாஜக மற்றும் காங்கிரஸ் அரசுகள் அதைத் தடுக்க சட்டம் கொண்டு வருகின்றது. மூன்றாவது அணியின் அரசு தீவிரவாதத்தை முன்கூட்டியே தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும்.
மத்தியில் அமையப் போகும் புதிய அரசு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்திட நடவடிக்கைகளை எடுக்கும்.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மூன்றாவது அணியின் பிரதமர் யார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அது பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதை மூன்றாவது அணி முடிவு செய்யும் என்றார் சீத்தாராம் யெச்சூரி.












Click it and Unblock the Notifications