தேர்தல் அலுவலருடன் ரகளை-அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
ராமநாதபுரம்: தேர்தல் அலுவலரிடம் வீடியோ கேசட்டை பறித்து, ரகளையில் ஈடுபட்ட ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி, ராமநாதபுரம், சக்கரகோட்டை ஊராட்சி பள்ளிவாசல் அருகே பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் அலுவலரான திருவாடானை துணை தாசில்தார் கதிரேசன் அப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கொடி, தோரணங்கள் குறித்து கேமராமேனுடன் சென்று வீடியோ எடுத்தார்.
இதை பார்த்த அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி ஆவேசம் அடைந்து கேமராமேனிடம் இருந்த வீடியோ கேமராவை திடீரென பறித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கும், தேர்தல் அலுவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கேசட்டை பறித்துக் கொண்டு கேமராவை திருப்பி கொடுத்தார்.
இதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.