அமெரிக்கா- விமானம் விழுந்து 5 பேர் பலி
ரெனோ: அமெரிக்காவில் நான்கு பயணிகள் உட்பட ஐந்து பேர் சென்ற குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் சென்ற அனைவரும் பலியாயினர்.
அமெரிக்காவின் வடக்கு நெவாட மாகாணத்தில் உள்ள கார்டுனர்வில்லே நகருக்கு அருகில் உள்ள மின்டன்-டகோ விமான நிலையத்தில் இருந்து இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட குட்டி விமானம் கிளம்பியது. மொத்தம் ஆறு பேர் உட்கார்ந்து பயணம் செய்யும் அந்த விமானத்தில் விமானி மற்றும் நான்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
விமானம் கிளம்பிய 10வது நிமிடத்தில் விழுந்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியானார்கள். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. சிறிய விமானம் என்பதால் அதில் கருப்பு பெட்டியும் இல்லை.
இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் ஆய்வாளர் வான் மெக்கென்னி கூறுகையி்ல, விபத்து குறித்து ஆராய்ந்து வருகிறோம். விமானத்தின் இரண்டு என்ஜின்களும் மண்ணுக்குள் புதைத்து விட்டதால், என்ஜின் கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளதா என்பதை தீர்மானிக்க முடியவில்லை.
விமானி கேரி அன்னாஸ் (58) கடந்த 40 ஆண்டுகளாக விமான ஓட்டிய அனுபவம் கொண்டவர். அதனால் விமானியின் மீது உடனடியாகக் குறை சொல்ல முடியாது. விசாரணையை தொடர்ந்து வருகிறோம் என்றார்.