பாஜகவுக்கு ஆதரவு உண்டாம் கூட்டணி இல்லையாம்!
ஹைதராபாத்: தனி தெலுங்கானா அமைத்து கொடுப்போம் என பாஜக கூறியுள்ளதால் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டோம் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளது.
இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி இணைந்தது. ஆனால், அந்த மாநிலத்தில் தேர்தல் முடிந்தவுடன் இந்தக் கட்சி பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.
பஞ்சாபில் நடந்த பாஜக கூட்டணி மாநாட்டில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி பங்கேற்றது. இதன்மூலம் மூன்றாவது அணியில் பிளவு ஏற்பட்டுவிட்டது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் நரசிம்ம ரெட்டி ஆகியோர் இது குறித்து ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். நாயுடு மற்றும் கம்யூனிஸ்ட் உடனான கூட்டணி மாநில அளவில் மட்டும் தான். இடதுசாரி கட்சிகளும் இந்த கூட்டணி தேர்தல் வரை மட்டும் தான் எனக் கூறியுள்ளன.
மத்தியில் யாரை ஆதரிக்க வேண்டும் என எங்கள் கூட்டணிக்குள் எந்த கட்டுப்பாடும் கிடையாது. தனி தெலுங்கான அமைக்க ஆதரவு கொடுக்கும் எந்த கட்சிக்கும் நாங்கள் மத்தியில் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறேம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஆதரவு கொடுப்போம். ஆனால், அவர்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் சேரமாட்டோம். எங்களது இந்த முடிவை பெரும்பாலான தெலூங்கானா மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றனர்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்காவது புரிந்தால் சரி!.












Click it and Unblock the Notifications