கருணாநிதியும் கொல்லைப்புறமாக வந்தவர் தான்-ராமதாஸ்
திண்டிவனம்: அன்புமணியை பார்த்து கொல்லைப்புறமாக எம்.பி.ஆனார் என்று ஸ்டாலின் சொல்கிறார். முதல்வர் கருணாநிதி, கனிமொழி உட்பட பலரும் அப்படி பதவி பெற்றவர்கள் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அன்புமணி கொல்லைப்புறமாக எம்.பி. ஆனவர் என்று ஸ்டாலின் சொல்கிறார். அண்ணாதுரை, கருணாநிதி உட்பட பலரும் இவர் கூறியபடி பதவி பெற்றவர்கள் தான். ஏன் கனிமொழி எந்த புறமாக இப்போது எம்.பி.யாகி உள்ளார் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா?
ஸ்டாலினுக்கு பொறாமை...
அன்புமணியைப் பார்த்து ஸ்டாலினுக்கு பொறாமை. அன்புமணி போல் புத்திக்கூர்மை, நிர்வாகத் திறமை இல்லையே என்று இப்படி எல்லாம் பேசுகிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. மின்சார வினியோகம் சரியாக இல்லை. எந்த அமைச்சருக்கும் நிர்வாக திறமை இல்லை.காமராஜர் எட்டு அமைச்சர்களை கொண்டு ஆட்சி செய்தார். அண்ணாதுரை ஒன்பது அமைச்சர்களை கொண்டு ஆட்சி செய்தார். கருணாநிதி 31 அமைச்சர்களை வைத்துக் கொண்டும் சரியாக ஆட்சி செய்யவில்லை.
திமுக வியாபார கட்சி...
முதல்வர் கருணாநிதி, பாமகவை வியாபார கட்சி என்கிறார். இந்திய அளவில் திமுக தான் வியாபார கட்சி. 1967ல் ஆரம்பித்து இதுவரை கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருப்பது திமுக தான்.
இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வர மாட்டோமா என நினைத்து திமுக படுத்து விட்டது. இந்த தேர்தலில் திமுகவில் போட்டியிடுபவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். அதனால் ஓட்டுக்கு ரூ. 500, ரூ. 1,000 கொடுக்கின்றனர். அவர்கள் எதை கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்றார் ராமதாஸ்.