Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'All options are open': 3வது அணிக்கு ஜெ. 'டாடா'?

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
டெல்லி & சென்னை: மூன்றாவது அணியிலிருந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பாஜக கூட்டணிக்கு தாவியதைப் போல தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கூட்டணிக்கு தாவுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்றிரவு கெளடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி சந்தித்துப் பேசினார்.

சந்தித்துவிட்டு வரும்போது காரில் கர்ச்சீப்பால் முகத்தை மூடிக் கொண்டு வந்தார் குமாரசாமி. இருந்தாலும் அவரை பத்திரிக்கைகளாயாளர்களும் டிவி கேமராக்களும் படம் பிடித்துவிட்டனர்.

இது குறித்து குமாரசாமி கூறுகையில், கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் தேசிய அரசியல் நிலவரம் குறித்தே சோனியாவுடன் பேசியதாகவும் கூறினார். மேலும் மிகவும் வியர்த்ததால் முகத்தை கர்ச்சீப்பால் துடைத்ததாகவும் அதைத் தான் முகத்தை மறைத்துக் கொண்டு வந்ததாக நிருபர்கள் கூறுவதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார்.

அவர் வந்தது வெளிநாட்டு ஏசி கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவ்வளவு வியர்த்தது என்றால் 'அரசியல் சூடு' தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

நாடகம் ஆடுவதில் நம்பர் ஒன் கெட்டிக்காரக்களான கெளடாவும் அவரது மகனும் மூன்றாவது அணிக்கு டாடா காட்டிவிட முடிவு செய்துவிட்டதைத் தான் சோனியாவுடனான இந்தச் சந்திப்பு காட்டுகிறது.

ஆனால் பெங்களூரில் இருந்தபடி அறிக்கை வெளியிட்டுள்ள கெளடா, மூன்றாவது அணி தொடர்ந்து செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

நிதிசுடன் பிரதமர் பேச்சு:

இந் நிலையில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமாருடன் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.

'வெள்ள நிவாரணம் நிதி' குறித்து பேசியதாக இருவரும் கூறியுள்ளனர். அவர்கள் எந்த 'நிவாரணம்' குறித்து பேசியிருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஜெயலலிதாவும் தயார்..

தேவ கெளடாவைப் போல மூன்றாவது அணியை ஏமாற்ற அதிமுகவும் தயாராகவே உள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக பாஜகவுடன் அக் கட்சியின் தலைவி ஜெயலலிதா பேசி வருகிறார்.

மேலும் இன்று வாக்களித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுக்குப் பின் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவெடுக்கப்படும். ''All options are open'' என்றார். இதன்மூலம் மூன்றாவது அணிக்கு டாடா சொல்ல அவர் தயாராகிவிட்டது தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் ஜெயலலிதா அந்தக் கட்சியை ஆதரிக்க முன் வருவார் என்று தெரிகிறது. அதற்கு பிரதி உபகாரமாக தமிழகத்தில் திமுக அரசுக்கு தந்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம். இந்த ஆதரவு வாபஸ் ஆனால் திமுக அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.

அதே நேரத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டோலோ, அல்லது காங்கிரஸ் தன்னை சேர்க்காவிட்டாலோ அல்லது ஜெயலலிதாவின் தயவு காங்கிரசுக்கு தேவைப்படாத நிலை ஏற்பட்டாலோ பாஜகவை ஜெயலலிதா ஆதரிக்கக் கூடும் என்கிறார்கள்.

பிஜூவுக்கு காங்கிரஸ் வலை..

அதே போல மூன்றாவது அணியில் உள்ள ஒரிஸ்ஸா முதல்வர் பிஜூ பட்நாயக்கை வளைக்க அவரது சிறு வயது நண்பரான மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.சிங் தியோவை களமிறக்கிவிட்டுள்ளது காங்கிரஸ்.

சட்டமன்ற தேர்தலையும் சந்தித்துள்ள பட்நாயக்குக்கு மாநிலத்தில் ஆதரவு தர காங்கிரஸ் தயாராக உள்ளது. பதிலுக்கு மத்தியில் ஆதரவு கோருகிறது.
அதே போல தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாஜக வலை வீசி வருகிறது.

நாயுடு இருப்பாரா..?

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரும் 16ம் தேதி மூன்றாவது அணியின் கூட்டம் நடக்கும் என நாயுடு கூறியுள்ளார். ஆனால், அன்று அவராவது அந்த அணியில் இருப்பாரா என்பது அவருக்கே தெரியாது என்பதே உண்மை.

காரணம், அவருக்கு வெங்கையா நாயுடு மூலமாக வலை வீசி வருகிறது பாஜக.

லாலு மீண்டும் காங்கிரஸ் பக்கம்...

மேலும் நான்காவது அணி என்று தனியாக இயங்கி வரும் லாலு பிரசாத் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதனால் லாலுவின் ஆதரவு மீ்ண்டும் காங்கிரசுக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.

கட்சியை உடைக்கும் அமர்சிங்..

அதே போல நான்காவது அணியில் உள்ள முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியில் அக் கட்சியின் வேட்பாளர் ஜெயப்பிரதா, அக் கட்சியின் முக்கியத் தலைவரான அஸம் கான் மோதல் காரணமாக பிளவே ஏற்பட்டுவிடும் என்று தெரிகிறது.

ஜெயப்பிரதாவை ஆதரிக்கும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கட்சியை உடைத்துக் கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன் வருவார் என்று தெரிகிறது. அமர் சிங்கின் நண்பரான தொழிலதிபர் அனில் அம்பானி இது தொடர்பாக இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்தினார்.

மூன்றாவது அணி வலுவாக உள்ளது.. பர்தன்:

இவ்வளவு நடந்த பின்னரும் இன்று நிருபர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தன், மூன்றாவது அணி வலுவாகவே உள்ளது. நிச்சயம் அதிக இடங்களில் வெல்லும். தேர்தல் முடிவுக்குப் பின் எங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவோம்.

ஜெயலலிதா எங்கள் கூட்டணியைவிட்டு விலகிவிடுவார் என்று கருத வேண்டிய அவசியமில்லை என்றார்.

பிரதமர் கனவு-ஆதரவு திரட்டும் பவார்..

இதற்கிடையே தன்னை பிரதமராக முன் நிறுத்தக் கோரி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சு நடத்தி வருகிறார்.

பாஸ்வான் வீட்டில் தீ.. சோனியா ஆறுதல்:

இதற்கிடையே நான்காவது அணியின் இன்னொரு கட்சியான லோக் ஜன் சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் டெல்லி வீட்டில் ‌சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பாஸ்வானை நேரில் அழைத்து இது குறித்து விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா. கூடவே காங்கிரசுக்கு ஆதரவு தருமாறும் கோரியதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+