திமுக பிரமுகர் குடோனில் 2000 மது பாட்டில்கள்!
செங்கோட்டை: செங்கோட்டை நகராட்சியின் முன்னாள் தலைவர் ரகீமின் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 மது பாட்டில்களை போலீகார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை வட்டார பகுதிகளில் அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்ட பி்ன்பும் வியாபாரம் நடைபெறுவதாகவும் ஏராளமான பாட்டில்கள் வாக்களர்களுக்கு வழங்குவதற்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சேர்வைக்காரன் புதுத்தெரு பகுதியில் முப்புடாதி என்பவரை பிடித்து விசாரித்து போது அவர் தன்னிடம் 3 பெட்டிகளில் 120 மதுபாட்டில்கள் இருப்பதாகவும், ஆனால் முன்னாள் சேர்மன் ரகீமுக்குச் சொந்தமான கிட்டங்கியில் பெருமளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் போட்டுக் கொடுத்து விட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த கிட்டங்கியின் பூட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 1920 குவார்ட்டர் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் திமுக கொடிகள், சிடிக்களை டிஎஸ்பி மயில்வாகனன் முன்னிலையில் பறிமுதல் செய்தனர்.
ரூ.60க்கு அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் இந்த குவார்ட்டர் பாட்டில் தற்போது டிமண்ட் காரணமாக ரூ.200 வரை விற்பனை செய்யவும், கட்சி பிரமுகர்களுக்கு வினியோகம் செய்யவும் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ரகீம், பார் மேலாளரும், திமுக கவுன்சிலருமான ஐயப்பன் ஆகிய 2 பேரும் போலீஸ் சோதனை அறிந்ததும் தப்பி விட்டனர். காதர், முப்புடாதி உள்பட 3 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில் கடத்தி வந்த திருப்பதி, முருகன், மிக்கேல் ஆகிய 3 பேர் புளியரை சோதனை சாவடியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications