'தமிழகத்தில் முக்கிய தொகுதிகளை காங். இழக்கும்'
சென்னை: தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினை காரணமாகவே காங்கிரஸுக்கு இந்த இழப்பு ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. இந்த இழப்பு காரணமாக மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படக் கூடும் எனவும் அது கணித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றது.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. மேலும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இது காங்கிரஸ் அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அதேபோல விலைவாசி உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். குறிப்பாக பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் பாதகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திமுக முன்னணி தமிழகத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதால் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற கவலையில் காங்கிரஸ் உள்ளதாம்.
தமிழகத்திற்கு பெருமளவிலான தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டாலும் கூட சாதாரண மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய திமுக அரசு தவறி விட்டதாக மக்கள் மனதில் எண்ணம் உள்ளது.
உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக திமுக மற்றும் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இதில் மின் வெட்டும் சில மாதங்களுக்கு முன்பு மக்களைப் பாடாய்ப் படுத்தி விட்டது.
மின்வெட்டு காரணமாக தொழில்துறை பெரும் நசிவை சந்தித்துள்ளது. பல நூறு தொழிலாளர்கள் இதனால் வேலையை இழந்தனர். இந்தத் துறையினர் எல்லாம் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.
தற்போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இலங்கை இனப்படுகொலையை திமுகவும், காங்கிரஸும் தடுக்கத் தவறி விட்டதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். இது காங்கிரஸ் மற்றும் திமுக மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.
திமுக அரசு கொடுத்த இலவச கலர் டிவி, காஸ் ஸ்டவ் உள்ளிட்டவை மக்களுக்கு திருப்தியைக் கொடுத்தாலும் கூட இவற்றையெல்லாம் விட பல முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க திமுக அரசு தவறி விட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
இவையெல்லாம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறது ராய்ட்டர்ஸ்.