போரை நிறுத்த இலங்கையிடம் யுஎஸ்-யுகே கண்டிப்பு
வாஷிங்டன்: இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். போர் பாதித்த பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மனிதாபிமான உதவிக் குழுக்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து இலங்கை மக்ளுக்கும் பொதுவான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கும், பிற சிறுபான்மையினருக்கும், தேசிய அரசியல் நீரோட்டத்தில் சம உரிமையும், சம அந்தஸ்தும் அளிக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அப்பாவி மக்களை விடுவிக்க முன்வர வேண்டும். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27ம் தேதி அளித்த உறுதிமொழியை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
ஐ.நா. மனிதாபிமான குழுக்களை போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போர்ப் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும் தேவையான உணவு, மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications