பிரதமர் பதவி: ஆண்டனியை முன்னிறுத்த காங். திட்டம்?
நாளை மறுதினம் மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக, மூன்றாவது அணி ஆகியவற்றின் உயர் மட்டத் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கணிப்புகளையும், தாங்களே நடத்திய சர்வேக்களையும் கையில் வைத்துக் கொண்டு இந்தக் கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஆரம்பித்துள்ளன.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனைகள் நடக்கினறன.
மத்தியில் மீண்டும் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடும் திட்டத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் இல்லத்தில் ஆலோசனைகளி்ல் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சோனியைவை பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினார்.
யார், யாருடைய ஆதரவைப் பெறுவது, யார் யாருடன் பேச்சு நடத்துவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். மூன்றாவது அணியில் உள்ள பிஜூ ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது.
அதே போல நான்காவது அணியில் உள்ள சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் சோனியாவே நேரடியாக பேச்சு நடத்தி வருகிறார்.
ஆனாலும் இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தால் தான் ஆட்சியமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியை காங்கிரஸ் நிச்சயமாகக் கருதுகிறது.
ஆனால், மன்மோகன் சிங்கை பிரதமராக்க இடதுசாரிகள் முன் வர மாட்டார்கள் என்பதால் மாற்றுத் திட்டத்தையும் தயார் செய்துவிட்டது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்களை மதிக்காமல் கையெழுத்திட்ட மன்மோகன் சிங்கை இடதுசாரிகள் மன்னிக்கத் தயாராக இல்லை. இதனால் ஆண்டனியை முன் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டனிக்கு கேரளத்தில் இடதுசாரிகளுடன் நல்லுறவு உள்ளதாலும், சோனியாவுக்கு சவாலாக இருக்க மாட்டார் என்பதாலும் அவரை பிரதமராக முன் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான பின் இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக காங்கிரஸ் காய்களை நகர்த்தும்.
பாஜகவும் ஆலோசனை..
அதே போல பாஜகவின் மூத்த தலைவர்களும் டெல்லியில் குவிய ஆரம்பித்துவிட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லி வந்துவிட்டார். மூத்த தலைவர்களுடன் அவர் தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
மூன்றாவது அணியில் உள்ள தெலுங்கு தேசம், அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் பேசும் பொறுப்பு மோடிக்கும் ஜஸ்வந்த் சி்ங்குக்கும் தரப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசத் தலைவர் நாயுடுவுடன் மூத்த பாஜக தலைவர்களான வெங்கய்யா நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
மாயாவதிக்கு பாஜக வலை..
அதே போல உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதிக்கும் பாஜக வலை வீசி வருகிறதி. முலாயமுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருவதை சுட்டிக் காட்டி மாயாவதியுடன் பாஜக பேசி வருகிறது.
ஆதரவு தந்தால் அவருக்கு துணை பிரதமர் பதவி தருவதாகவும் உறுதிமொழி தரப்படுவதாகத் தெரிகிறது.
இதற்கிடையே யாருக்கும் ஆதரவு தராமல் மூன்றாவது அணியே ஆட்சியை அமைப்பது, அதற்கு காங்கிரசின் ஆதரவைப் பெறுவது என்றரீதியில் இடதுசாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மூன்றாவது அணியால் ஆட்சியமைக்க முடியாவிட்டால், அவர்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே இடதுசாரிகளை விட்டுவிட்டு எந்தப் பக்கமும் தாவலாம். அப்படிப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இடதுசாரிகள வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நிலை வரலாம்.
இந்த நிலைமை நிச்சயம் வரும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இதனால் தான் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஆண்டனியை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
பிரகாஷ் காரத் போன்ற தலைவர்கள் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று கூறினாலும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா போன்ற இடதுசாரித் தலைவர்கள், காங்கிரஸை ஆதரிக்கத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.