ஆற்காடு பாமக எம்எல்ஏவுக்கு அடி-திமுக மீது புகார்
வாலாஜாபேட்டை: அரக்கோணம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுக்க முயன்ற பாமக எம்எல்ஏ தாக்கப்பட்டார். இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் தொகுதி, ஆற்காடு பகுதியில் இருக்கும் குப்பிடிசாத்தம் கிரமாத்தில் நேற்று வாக்குப் பதிவின் போது திமுகவினர் சிலர் கள்ள ஓட்டு போடுவதாக பாமகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி பாமக எம்எல்ஏ இளவழகன் அங்கிருந்த 192ம் எண் வாக்குச்சாவடிக்கு காலை 11.30 மணிக்கு கூட்டணி கட்சியினருடன் விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த தேர்தல் ஆய்வாளரிடம் இளவழகன் வாக்குப் பதிவு பாதுகாப்பு குறித்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திமுகவினர் சிலர் அவருடன் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அதில் பாமக எம்எல்ஏ இளவழகன் தாக்கப்பட்டார். வெளியில் நின்று கொண்டிருந்த அவரது கார் கண்ணாடியும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து இளவழகன் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் செய்தார்.












Click it and Unblock the Notifications