வாக்குசாவடியில் பிரச்சாரம்-தேர்தல் அலுவலர் நீக்கம்
கோவை: கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச்சாவடிக்குள் பிரச்சாரம் செய்த பெண் தேர்த்ல் அதிகாரி ஒருவர் தற்காலிமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டி கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இருக்கும் மூன்றாவது வார்டை சேர்ந்த கன்னியாகுருகுலம் வாக்குச் சாவடியில் ராஜேஸ்வரி (40) என்பவர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வாக்குப் பதிவின் போது அந்த வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்தவர்களிடம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளார்.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதை குறிப்பிட்டு அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜென்ட்கள் தேர்தல் பார்வையாளர் அகர்வாலுக்கு புகார் செய்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு ராஜேஸ்வரி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரி ஒருவர் புதிய தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.