கல்யாண வீட்டில் சந்தித்த அமர்சிங் -ராஜ்நாத் சிங்
இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. இதில் அதிகம் இடம்பிடிப்பவர்கள் அல்லது அவர்களின் ஆதரவு கொண்டவர்கள் தான் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையி்ல் இங்கு சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவின் போது நான்கு முனை போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பாஜக, காங்கிரஸ் என் நான்கு பெரிய கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கின.
தற்போது தேர்தல் முடிந்த நிலையில் பல கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியதை அடுத்து பயந்து போன இந்த இரண்டு தேசிய கட்சிகளும் மூன்றாவது அணியில் இருக்கும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் அமர் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டதாக தெரிகிறது. இந்த செய்தி தற்போது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இடதுசாரிகள் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்ட போது, காங்கிரசுக்கு கை கொடுத்து உதவிய சமாஜ்வாடி கட்சியை தன்பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
இதையடுத்து தான் ராஜ்நாத் சிங்கும், அமர் சிங்கும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. இரு கட்சியினரும் நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியை உத்தர பிரதேசத்தில் இருந்து விரட்ட வேண்டுமென்றால், பாஜகவும், சமாஜ்வாடியும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மற்றொரு பாஜக தலைவர் கூறுகையில், நான்காவது அணியில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முயற்சித்து வருகிறோம் என்றார்.
அமர் சிங் மறுப்பு...
ஆனால் ராமர் கோவில் கட்டுவது பாஜக முக்கிய கொள்கையாக இருக்கும் வரையில் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பே இல்லை என அமர்சிங் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ராஜ்நாத் சிங் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஒரு திருமண நிகழ்ச்சியில் தான் நான் அவரை சந்தித்தேன். அது அரசியல் கூட்டம் அல்ல.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து நான் அவரிடம் எதுவும் பேசவில்லை. ராமர் கோவில் கட்டுவது தான் பாஜகவின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. அதனால் அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அமர்சிங்.