பிரசாரத்தின்போது இடையூறு - இல.கணேசன் மீது டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது தனக்கு இடையூறு செய்ததாக பாஜக தலைவர் இல.கணேசன் மீது சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்குமாறு கணேசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் போட்டியிட்டார். அதேபோல சுயேச்சையாக இதே தொகுதியில் போட்டியிட்டார் பிரபல சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, பாஜக தலைவர் இல.கணேசன் தூண்டுதலின் பேரில், அவரது கட்சியினர் என்னையும், என்னுடன் வந்த ஆதரவாளர்களையும் தாக்கினர்.
என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்த அவர்கள் மீது நான் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
எனவே என்னைத் தாக்கி பிரசாரத்தை தடுத்த இல.கணேசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் என்னைத் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனு நீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது தன் சார்பில் ராமசாமியே ஆஜராகி வாதாடினார். கணேசன் சார்பில் ரபு மனோகர் ஆஜராகி, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்று வாதாடினார்.
வாதத்திற்குப் பின்னர் இல.கணேசன் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.