காங்கிரசுக்கு சமாஜ்வாடி-தேவ கெளடா ஆதரவு
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அமைச்சரவையில் இடம்பிடிப்போமா என்பது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சாதனைக்கான அங்கீகாரமாக அமைந்துள்ளது. இதையடுத்து மன்மோகன் மீண்டும் பிரதமராக இருக்கிறார்.
இந்நிலையில் 262 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆட்சியமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுவுடன் சோனியா தொலைபேசியில் பேசியதை அடுத்து அவரிடம் இருக்கும் 4 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தற்போது காங்கிரசுக்கு 7 தொகுதிகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்நிலையில் 23 தொகுதிகளை கைவசம் வைத்திருக்கும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. இதனால் ஆட்சியமைப்பதில் இருந்த சிறு சிக்கலும் தீர்ந்துள்ளது.
இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில்,
மதசார்பற்ற கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மன்மோகன், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசினேன். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். இன்று மாலை பிரதமரை சந்திக்க இருக்கிறோம்.
மதசார்பற்ற, இன சார்பற்ற ஆட்சி அமைய நாங்கள் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்போம். அதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமைச்சரவையில் இடம் பிடிப்போமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எங்களிடம் எந்த வகையில் உதவி கேட்கிறார்கள் என்பதை பொறுத்து அது இருக்கும்.
இது தொடர்பாக காங்கிரசுடன் பேசுவதற்கு கட்சி தலைவர் முலாயம் சிங் என்னை நியமித்துள்ளார். வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க முயன்றேன். அவர் கூட்டங்களில் பிசியாக இருப்பதால் அவரை சந்திகக் முடியவில்லை என்றார்.
அசம் கான் ராஜினாமா...
இந்நிலையில் அமர்சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியின் மற்றொரு பொது செயலாளரான அசம் கான் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், அதை அமர்சிங் மறுத்தவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கும், அசம் கானு்ககும் இடையே எந்த சிக்கலும் இல்லை. அவர் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். அவர் கட்சியின் வளர்ச்சிக்கு இதுவரை செய்துள்ள சேவைகளை மறந்துவிட முடியாது. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றார்.
ஆதரவு தர கெளடா கட்சியும் தயார்...
மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரும் மூன்றாவது அணியை உருவாக்கியவருமான தேவ கெளடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறுகையில்,
காங்கிரஸ் ஆதரவு கேட்டால் அதை வழங்க நாங்கள் தயார். அதற்கு பதிலாக நான் அமைச்சர் பதவியெல்லாம் கேட்கவில்லை என்றார்.
தேர்தல் முடிவுக்கு முன்பே சோனியா காந்தியை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்தவர் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் கோலோச்சி வரும் பாஜக மூத்த தலைவர்களான ரெட்டி சகோதரர்களின் சுரங்க பிஸினஸை முடக்க, தனக்கு மத்திய கனிம வளத்துறையை குமாரசாமி கோரியதாகத் தெரிகிறது.
பெங்களூர்-3 தொகுதிகளை வென்ற பாஜக:
கர்நாடகத்தில் பெங்களூரில் உள்ள வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், மத்திய பெங்களூர் ஆகிய மூன்று தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 19ல் வென்றுள்ளது. காங்கிரஸ் 6, தேவ கெளடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் வென்றுள்ளன.
அம்மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான பங்காரப்பாவை வீ்ழ்த்தியுள்ளார்.
வடக்கு பெங்களூர் தொகுதியில் பாஜகவின் சந்திரே கவுடா, காங்கிரஸ் வேட்பாளர் ஜாபர் ஷெரீபை தோற்கடித்தார்.
தெற்கு பெங்களூரில் பாஜக வேட்பாளர் அனந்த் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், பெங்களூர் ஊரகத் தொகுதியில் குமாரசாமி வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications