போர் நிறுத்தம்-மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரப் போவது உறுதியானவுடன் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 27ம் தேதி நான் உண்ணாவிரதம் இருந்தேன். அதைத் தொடர்ந்து மத்திய அரசு எடுத்த முயற்சியினால் இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போரை நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனாலும் இலங்கையில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படவில்லை. ராணுவ நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக ஒரு பக்கமும், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஒரு பக்கமும் செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அரசும் ஏற்கெனவே கூறிவருவது போல போர் நிறுத்தம் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications