அமைச்சர் பதவி-ராகுல் நிராகரிப்பு?: வைகோவை வீழ்த்திய தாகூருக்கு பதவி?
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியை ஏற்குமாறு பிரதமரும் தனது மிக நெருக்கமான ஆதரவாளர்களும் விடுத்த வேண்டுகோளை ராகுல் காந்தி நிராகரிப்பார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அமைச்சரவையில் இளம் முகங்களுக்கு கூடுதல் இடங்களை அவர் பெற்றுத் தருவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகரி்ல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தோற்கடித்த தனது நெருங்கிய நண்பரான மாணிக் தாகூருக்கு அமைச்சர் பதவி தர ராகுல் பரிந்துரைப்பார் என்கிறார்கள்.
அதே போல சச்சின் பைலட், ஜிதேந்திர பிரசாதா, ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய இளம் எம்பிக்களுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம்.
அதே நேரத்தில் தான் முழு நேர கட்சிப் பணியில் ஈடுபட விரும்புவதாகவும், அடுத்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடப் போவதாகவும், இதனால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் ராகுல் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அவரை அமைச்சரவையி்ல் சேர்க்க விரும்பும் பிரதமர் அவரை கிராம மக்களுடன் நெருங்க வைக்கும் ஊரக வளர்ச்சித்துறை அல்லது சமூக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் மனித வளத்துறை அமைச்சராக்க விரும்புகிறார். இறுதி முடிவு ராகுலின் கையில் தான்.
லாலுவை சேர்க்க ராகுல் எதிர்ப்பு:
தனது கட்சியை அவமதித்து ஒரு இடம் தருவதாகச் சொன்ன ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க ராகுல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
4 இடங்களில் மட்டுமே வென்றாலும் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என சோனியாவும் பிரதமரும் விரும்பினாலும் ராகுல் அதை எதிர்க்கிறார்.
அவரைச் சேர்த்தால் பிகாரில் காங்கிரஸ் தனியாக வளர முடியாது. யாருடனும் கூட்டணி இல்லாமல் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வளர வேண்டுமானால் நாம் தனியே நிற்க வேண்டும் என ராகுல் கூறுகிறார்.
டீ பார்டடி..:
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள தனது கட்சியின் முக்கிய இளம் தலைவர்களுக்கு டெல்லியில் டீ பார்ட்டி தருகிறார் ராகுல். அதி்ல் கட்சியின் செயல்பாடு, கட்சி வளர்ச்சிக்கான அடுத்தகட்டப் பணிகள் குறித்து ராகுல் ஆலோசனை நடத்துகிறார்.