தமிழகத்தில் காலூன்றும் பிஎஸ்பி-வி.சிக்கு ஆபத்து
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி கிட்டத்தட்ட 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தலித் அமைப்புகள், சிறு சிறு கட்சிகள் இருந்தாலும் கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமே சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிளைகள் உள்ளன.
கிட்டத்தட்ட தலித் மக்களுக்கான ஒரே பெரிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் திகழ்ந்து வருகிறது.
மற்றொரு பிரபலமான தலித் கட்சியாக புதியதமிழகம் இருந்தாலும் கூட சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு வங்கியோ, வளர்ச்சியோ இல்லாமல் இருக்கிறது புதிய தமிழகம்.
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய தலித் சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி.
இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இக்கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறையினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இத்தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்றுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி. இது மிகப் பெரிய விஷயம். பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தை, அதாவது நான்காவது இடத்தை இக்கட்சி பிடித்துள்ளது. இதுவும் ஒரு சாதனையாகும்.
இந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட பிரிசில்லா பாண்டியன். இவர் சிறையில் இருக்கும் ஜான் பாண்டியனின் மனைவி ஆவார். 39,086 வாக்குகளை பிரிசில்லா பெற்றுள்ளார்.
அதேபோல திருவள்ளூர் தொகுதியில், 10,750 வாக்குகளும், பொள்ளாச்சியில் 16,815 வாக்குகளையும் இக்கட்சி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் நான்கு இலக்க எண்ணிக்கையில்தான் வாக்குகளைப் பெற்றுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
இந்த எண்ணிக்கை கடலில் கரைத்த பெருங்காயத்தைப் போல தெரிந்தாலும் கூட, ஒரு தலித் கட்சி தனியாகப் போட்டியிட்டு இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.
பொள்ளாச்சி தொகுதியில், வெற்றி பெற்ற வேட்பாளரின் வெற்றி வி்த்தியாசம் வெறும் 5000க்கு மேல்தான். ஆனால் பகுஜன் வேட்பாளர் இங்கு 16,815 வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த புதிய எழுச்சி, நிச்சயம் வருங்காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவரான செல்வம் என்கிற செல்வப்பெருந்தகைதான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பிரிவு தலைவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் சற்று சீரியஸாக இக்கட்சி செயல்பட்டால், திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் எதிர்காலத்தில் முக்கிய தலித் கட்சியாக மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.