பிரபாகரன் மரணம்: கருத்து கூற கருணாநிதி மறுப்பு
சென்னை: பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
இன்று காலை திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிரபாகரன் மரணச் செய்தி வந்துள்ளதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் கருணாநிதி, இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
1956ம் ஆண்டு ஈழத்தில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழர்கள் இழந்த உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காக அந்தப் போராட்டம் தொடங்கியது.
ஆனால் பின்னர் அது பல்வேறு திருப்பங்களையும், திருப்புமுனைகளையும் சந்தித்தது. இன்று இந்த நிலைக்கு அது வந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாக பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளது என்றார் அவர்.
கருணாநிதி பேட்டிக்குப் பின்னர் சில மணி நேரங்களில் பிரபாகரனின் மரணச் செய்தியை இலங்கை அரசு உறுதிப்படுத்தியது.