இலங்கை அரசின் வதந்திகளை நம்பாதீர்-தமிழர் பாதுகாப்பு இயக்கம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். அவர் குறித்து இலங்கை அரசு பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உடலை கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும், இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.
1 லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர்...
உண்மை என்னவெனில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போர்ப்பகுதியில் இன்னமும் உள்ளார்கள். அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள ராணுவம் கொடூர தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.
மக்களைக் காப்பாற்ற ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர்.
இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே, இலங்கை அரசு பொய்ச் செய்திகளை பரப்பி வருகிறது.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்த கட்டத்திலாவது ஐ.நா.வும், உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.