சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே இருக்கும் பண்ணை வீட்டிலிருந்து காலி செய்யுமாறு தன்னை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மிரட்டி வருவதாக அவரது சகோதரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தா.பாண்டியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் வத்தலக்குண்டு போகும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் குடும்பத்தாருக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது.
டேவிட் பண்ணை எனப்படும் இந்த வீட்டில் தற்போது தா.பாண்டியனின் சகோதரர் செளந்தரராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் தா.பாண்டியனின் தூண்டுதலின் பேரில் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் செளந்தரராஜன் குடியிருந்து வரும் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடு தா.பாண்டியனுக்கு சொந்தமானது அதனால் உடனே வீட்டை காலி பண்ணுங்கள் என கூறி மிரட்டியுள்ளனர். வீட்டில் இருந்த குடிநீர் குழாய் இணைப்பையும் அடித்து உடைத்துள்ளனர்.
பயந்து போன தா.பாண்டியனின் சகோதரர் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது சகோதரர் தா.பாண்டியனும், சகோதரிகள் ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் ஆகியோரின் தூண்டுதல் காரணமாக சுமார் 12 பேர் வீட்டை காலி செய்யும்படி மிரட்டினார்கள். குடிநீர் குழாய் இணைப்பையும் உடைத்தனர் என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தா.பாண்டியன், ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications