ஒரு வாரம் முன்னதாக துவங்கும் குற்றால சீசன்
குற்றாலம்: கேரளாவில் பருவ மழை இந்தாண்டு ஒரு வாரம் முன்னதாக துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குற்றால சீசனும் முன்னதாக துவங்கும் என தெரிகிறது.
ஆண்டுதோறும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் துவங்குவது வழக்கம். கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையின் ஒரு பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலையின் மறுபக்கத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலாக மழை பெய்யும். இது குற்றால சீசன் என்று அழைக்கப்படுகிறது.
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இந்த சீசன் நீடிக்கும். இதையடுத்து அந்த சமயத்தில் குற்றாலத்தின் குளூமையை அனுபவிக்க தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
கேரளாவில் இந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட 6 நாட்கள் முன்னதாக அதாவது மே 24ம் தேதி முதல் துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குற்றால சீசனும் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என தெரிகிறது.
இதை உறுதி செய்வது போல் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவ காற்று வீசத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில் குற்றாலம் மெயின் அருவி வறண்ட நிலையிலையே காணப்படுகிறது. தீர்த்தம் போல் சிறிதளவு தண்ணீர் கசிந்து வருகிறது. ஆனால், கேரளாவிலும் தொடர்ந்து குளிர் காற்று வீசுவதால், விரைவில் சீசன் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications