'பிரபாகரன்'-நெல்லை நீதிமன்றம், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாக இலங்கை ராணுவம் செய்தி வெளியிட்டதையடுத்து நெல்லையில் நீதிமன்றம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். நெல்லையில் நேற்று இரவு பஸ்கள் நிறுத்தப்பட்டன. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் இதையும் மீறி பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பாளையங்கோட்டை விஎம் சத்திரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் மீது திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் ஜெனரேட்டர் அறையின் கண்ணாடி உடைந்தது. அலுவலகத்திற்கும் லேசான சேதம் ஏற்பட்டது. குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அலுவலக காவலாளி வெளியே ஓடி வந்து பார்த்தார். அதற்குள் இருவரும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது விரைவு நீதிமன்றத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இங்கும் லேசான சேதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, உதவி கமிஷனர்கள் சொக்கலிங்கம், ராமசந்திரன் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர்.
நீதிமன்றம் உள்பட அடுத்தடுத்து 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications