வாக்கு பதிவு இயந்திரங்களில் மோசடி-ராமதாஸ்
சென்னை: வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது, விற்பது என்ற இழிநிலைக்குப் போய் விட்டது திமுக. இதை நரேஷ்குப்தா தலைமையிலான தேர்தல் அலுவலகம் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அதே போல வழக்கமாக ஜெயலலிதா மட்டுமே புலம்பும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி என்ற புகாரை ராமதாசும் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ராமதாஸ், திமுக இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றி முறையானதல்ல, நேர்மையானதல்ல. மோசடிச் செயல்களில் ஈடுபட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
வாக்குகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது மட்டுமே தேர்தல் என்ற புதிய நடைமுறையை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்குகளை வாங்குவது, விற்பது என்ற இழிநிலைக்குப் போய் விட்டது திமுக. சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் முறைக்கு அது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
மக்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு விருப்பபப்ட்டு வாக்களிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து அதன் மூலம் மட்டுமே திமுக வாக்குகளை கைப்பற்றியது.
தில்லமுல்லுகளை அரங்கேற்ற, தேர்தல் என்ற வார்த்தைக்கு தீராத பழியை ஏற்படுத்தி விட்டது திமுக.
தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளராக இருந்து விட்டது. நரேஷ்குப்தா என்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட திமுகவின் மோசடிகளை கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தது வேதனையானது, வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.
நவீன் சாவ்லா தலைமையிலான தேர்தல் ஆணையம் நாட்டுக்குத் தேவையில்லாத ஒன்றாகி விட்டது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம், அதிமுகவுடன் இணைந்து திமுகவின் மோசடிகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என்றார் ராமதாஸ்.