இனவாத சக்திகளே பிரச்சினைக்குக் காரணம்: பழைய பேட்டியில் பிரபாகரன்
சென்னை: சிங்கள மக்களை நாங்கள் நேசிக்கிறோம். அவர்களும் போரை விரும்பவில்லை. ஆனால் இடையில் புகுந்த இனவாத சக்திகளே பகைமை ஏற்படக் காரணம். அவர்களை சிங்களர்களே திருத்த வேண்டும். அப்படியானால்தான் இலங்கைத் தீவில் நிரந்தர அமைதி உண்டாகும் என முன்பு அளித்த ஒரு பேட்டியில் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
1994ம் ஆண்டு பிபிசி தமிழ் சேவைக்கு பிரபாகரன் அளித்த ஒரு பேட்டியிலிருந்து சில பகுதிகள்..
பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம். ஒரு சுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு இலங்கை அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். நாமும் சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம்.
இன்று சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போர். எனவே போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். யார் இந்தப் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்களோ அவர்களே இந்தப் போருக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும்.
போர் மூலம், அடக்கு முறையின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதன் மூலமே இன்றைய இனநெருக்கடிக்குத் தீர்வு காணலாம். சமாதான வழிமூலமே இதனைச் சாதிக்கலாம்.
இதனை சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கும் ராணுவவாதிகளுக்கும் சிங்கள மக்களே உணர்த்த வேண்டும். நாம் சிங்கள மக்களை நேசிக்கிறோம். நாம் சிங்கள மக்களுக்கு விரோதமானவர்கள் அல்ல.
சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாடுகளுக்கும் பகைமைக்கும் இனவாத சக்திகளே காரணம். இந்த இனவாத சக்திகளைச் சிங்கள மக்கள் இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் பிரபாகரன்.