வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் ஓட்டு - கலாம்
நாக்பூர்: வெறும் அரசியலை விரும்பாமல், வளர்ச்சிக்கான அரசியலையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே லோக்சபா தேர்தல் முடிவு காட்டுகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
நாக்பூர் வந்திருந்த அப்துல் கலாமிடம், செய்தியாளர்கள் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம் பதிலளிக்கையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, நமது நாட்டு மக்கள் வளர்ச்சிக்கான அரசியலையே விரும்புகிறார்கள். அரசியலுக்கான அரசியலை அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதை மிகத் தெளிவாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்தியா புதிய சூழ்நிலையை சந்தித்துக் கொண்டுள்ளது. வெற்று அரசியலை மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். வளர்ச்சிப் பாதைக்கு தங்களைக் கொண்டு செல்லும் அரசியலையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக காட்டுகின்றன.
நமது நாட்டின் எதிர்காலம் பொருளாதார வளர்ச்சியில்தான் உள்ளது. எனவே அதுதான் இப்போது மிகவும் முக்கியமானது என்றார் கலாம்.