தமிழர் மீது ராணுவ தாக்குதல் தொடர்கிறது-நெடுமாறன்
சென்னை: போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி இலங்கை, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது. ஆனால், தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெடுமாறன் கூறுகையில்,
இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் உறுப்புகளை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு பகுதியில் இருப்பவர்கள் உணவும், மருந்தும், குடிநீரும் இல்லாமல் செத்து வருகின்றனர்.
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி இலங்கை, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது. ஆனால், தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அப்பாவி மக்களை காப்பாற்ற ஐநா விரைவாகவும், நேரடியாகவும் தலையிட வேண்டும்.
போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை பிடித்து போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.
21ல் எழுச்சி பேரணி...
அவர்களை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐநா அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் 21ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழுச்சி பேரணி நடத்தும் என்றார் நெடுமாறன்.
வணிகர் சங்கம் பங்கேற்பு...
நெடுமாறன் அறிவித்துள்ள இந்த பேரணியில் தாங்களும் கலந்து கொள்ள போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மேலும் வணிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த பேரணியில் பங்கேற்க 21ம் தேதி மாலை 3 மணிக்கு மன்றோசிலைக்கு அருகில் வரவேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications