For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்கூட்டியே தொடங்கும் தென் மேற்கு பருவ மழை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் முக்கியப் பருவ மழைகளில் ஒன்றான தென் மேற்குப் பருவமழை முன் கூட்டியே ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென் மேற்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். இந்தியாவில் அந்தமானில் தொடங்கும் இந்த மழை அப்படியே கேரளாவிலும், தென் கர்நாடகம், தென் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் பொழிவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கவுள்ளது.

அதாவது மே 23ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் பருவ மழை பெய்யத் தொடங்கும் எனத் தெரிகிறது.

தற்போது தெற்கு வங்க கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல்பகுதி முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு அரபி கடலின் சில
பகுதிகளிலும், தெற்கு வங்க கடலின் மேலும் பல பகுதிகளிலும் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

கேரளாவில் 23-ந் தேதியில் இருந்து 25-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதிக்கு பதிலாக ஒருவாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடும்.

கடந்த 2 நாட்களாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபி கடலிலும், வங்க கடலிலும் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் 23-ந் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு
நிலை உருவாகலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏறக்குறைய இயல்பான அளவு மழை பெய்யும்.

பருவ மழை தொடக்கம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்போது தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சாரலும், மழையும் பெய்யும் என்றார்.

இந்த நிலையில், பருவ மழைக்கு முன்னோட்டமாக இன்னும் 48 மணி நேரத்தில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மழை பெய்யத் தொட்ங்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்யும்.

மேலும் டெல்லியில் கடந்த பல நாட்களாக வறுத்தெடுத்து வந்த வெயிலும் இனி படிப்படியாக குறைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் 28ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் விரைவில் சீசன்...

தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதால் குற்றாலத்திலும் விரைவில் சாரல் மழை பெய்யத் தொடங்கி அருவிகளில் நீர் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தற்போது அருவிகளில் தண்ணீர் கொட்டவில்லை. இதனால் அருவிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X