ஸ்பெக்ட்ரம், கேஸ்: பாலு-ராசாவுக்கு காங் எதி்ர்ப்பு ஏன்?
டி.ஆர்.பாலு கடந்த அமைச்சரவையில், நெடுஞ்சாலைப் போக்குவரத்து, கப்பல்துறை பொறுப்பை வைத்திருந்தார்.
நாட்டின் மிக முக்கிய பொருளாதார நாடியான நெடுஞ்சாலைத் திட்டங்களை பாலு சிறப்பாக கவனிக்கத் தவறி விட்டார், தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் பெரும் பகுதியை தமிழகத்திற்கு கொண்டு சென்று விட்டார். பிற மாநிலங்களில் நெடுஞ்சாலைத் திட்டங்களை சரிவர செய்யவில்லை என்பது காங்கிரஸின் முக்கியக் குற்றச்சாட்டு.
அதேபோல, தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தை, காண்டிராக்ட் கம்பெனி போல மாற்றி விட்டார் பாலு என்பதும் காங்கிரஸ் தரப்பு கூறும் இன்னொரு குற்றச்சாட்டு.
இதை விட முக்கியமாக டி.ஆர்.பாலுவின் மகன்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்காக ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி எரிவாயு இணைப்புகளை பாலு பெற்றார் என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பதையும், இதுதொடர்பாக பத்திரிகைகள் ஆதாரப்பூர்வமாக செய்திகள் வெளியிட்டன என்பதும் நினைவிருக்கலாம்.
இந்தப் புகார்கள் தொடர்பாக பாலு மீது அப்போதே காங்கிரஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்க நினைத்தாலும், திமுகவின் தயவு தேவைப்பட்டதால் அது எடுக்கப்படாமல் போனது.
அடுத்தது ராஜா. இவர் மீதான குற்றச்சாட்டு மிகப் பெரியது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 60 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்ததாக கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின.
ஆனால் இதை ராஜாவும் சரி, முதல்வர் கருணாநிதியும் சரி தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் ராஜா மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ கண்டுபிடித்து மத்திய அரசிடம் கொடுத்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் ராஜா மற்றும் பாலு ஆகியோருக்கு அமைச்சர் பதவி தர பிரதமர் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் இவர்கள் மீதான புகார்கள் உண்மையானவைதான் என்று தமிழக எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக பிடித்துக் கொண்டு விடும் என்ற அச்சத்தில்தான் இவர்களுக்கும் எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்கி விட வேண்டும் என்று திமுக பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கதவைச் சாத்தியவர் ராகுல் காந்தி!
டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் வேண்டாம் என்று கூறியவர் ராகுல் காந்தி தான் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. அவர்தான் ஊழல் கறை படிந்த அமைச்சர்கள் நமக்குத் தேவையா என்று சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் கூறி இவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டாராம்.
2 நாட்களுக்கு முன்பு ஊழல் கறை படிந்தவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று சோனியா மற்றும் கட்சித் தலைவர்களிடம் கூறினாராம் ராகுல். இதை சோனியாவும் மற்ற தலைவர்களும் ஏற்றுக் கொண்டனராம்.
இதையடுத்தே புதிய பார்முலா ஒன்றை காங்கிரஸ் உருவாக்கி அதை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் வைத்ததாம். அதன் அடிப்படையில்தான் பாலு, ராசாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டதாம்.
அதேபோல தேர்தலுக்கு முன்பாக லாலுவை கூட்டணியை விட்டு கழற்றி விட வேண்டும் எனவும் ராகுல் காந்திதான் ஐடியா கூறினாராம். அதன் அடிப்படையில்தான் லாலு தானாகவே வெளியேறியபோது அதை காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாம்.
தேர்தலில் லாலுவும், அவரது கட்சியும் அடியோடு அடிபட்டு விடவே இப்போது ராகுலின் பெருமை கட்சிக்குள் வெகுவாக அதிகரித்துள்ளதாம்.
அதேபோல நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முலாயம் சிங் யாதவையும், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவைப் பெறலாம் என ஐடியா கூறியதும் ராகுல்தானாம்.
ஆனால் திமுகவின் நெருக்குதலால் பாலு, ராசா விஷயத்தில் காங்கிரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.