கடைசி கட்ட போரில் 6200 வீரர்கள் பலி: இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்டப் போரில் 6200க்கும் மேற்பட்ட வீரரர்கள் பலியாகியுள்ளதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபரின் தம்பியுமான கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இன்று வரையிலான போரில் ராணுவத்திற்கு ஏற்பட்ட சேதமாம் இது.
நேற்று இலங்கை டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். இலங்கை ராணுவத் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து இப்போதுதான் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இலங்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாக கூறியிருந்தது இலங்கை. ஆனால் மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை அது தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, 1983ம் ஆண்டு முதல் நடந்து வந்த இனப்போரில், 80 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள் வரை உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே நீண்ட காலம் நடந்த இனப்போர் இதுதான் என்றும் அது வர்ணித்துள்ளது.
ஆனால் ஐ.நா.வின் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையி்ல் 30 ஆயிரம் வீரர்களை இலங்கை ராணுவம் இழந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையி்ல் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இந்த வெற்றியைப் பெற நாங்கள் செய்துள்ள தியாகம் மிகப் பெரிது என்றும் கூறியுள்ளார் கோதபய.