பன்றிக் காய்ச்சல் சந்தேகம்: சிகிச்சை பெற்று வந்த பயணி திடீர் மாயம்!
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர் திடீரென்று தப்பி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து ஏர்-அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, பயணி ஒருவருக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பன்றிகாய்ச்சல் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை ஆர்.எம்.ஓ சிவப்பிரகாசம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
சார்ஜாவில் இருந்து வந்தவர் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர்.
கட்டுமான தொழிலாளியான அவருக்கு தொண்டை வலி மற்றும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
இதனால் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சிகிச்சைக்காக டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து கோவை வந்த தாய், மகனுக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருந்ததாக றப்பட்டது.
இதனால் அவர்களுக்கு மருத்துவ குழுவினர் செய்த ரத்தப் பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
ஆனால் தற்போது கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகின்றது. இதனால் மருத்துவ மனையில் பரபரப்பு நிலவி வருகின்றது.
தப்பிச் சென்ற நபர் குறித்து போலீசாரிடம் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்ட்டுள்ளதாகவும், இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருதாகவும் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications