அழகிரி, தயாநிதி, ராஜாவுக்கு கேபினட் - டி.ஆர். பாலு துணை சபாநாயகர்?

திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது.
மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தலைவர்களுடன் தீவிர ஆலோசனை...
அமைச்சரவையில் சேருவதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று காலையிலிருந்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
தனது இல்லத்தில் இருந்தபடி மூத்த தலைவர்களை வரவழைத்து தனித் தனியாக அவர்களின் கருத்தைக் கேட்டறிந்தார்.
நாராயணனுடன் மீண்டும் ஆலோசனை..
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று காலையும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சரவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்களும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் மத்திய அமைச்சரவையில் சேருவதென முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி காங்கிரஸ் தரும் 3 கேபினட் மற்றும் நான்கு இணை அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதெனவும், நான்கு இணையமைச்சர்களில் ஒரு பொறுப்பை தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சராக கேட்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாலு துணை சபாநாயகராக்கப்படலாம்...
மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மூத்தவரான டி.ஆர்.பாலுவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடையாது எனத் தெரிகிறது. அதற்குப் பதில் அவரை லோக்சபா துணை சபாநாயகராக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கனிமொழிக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மீதமுள்ள 3 இணை அமைச்சர் பொறுப்புகளில் ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.
அழகிரிக்கு - உரம், தயாநிதிக்கு - ஜவுளி..
மு.க.அழகிரிக்கு வேதி மற்றும் உரத்துறை வழங்கப்படலாம்.
தயாநிதி மாறனுக்கு முன்பு கூறப்பட்டதைப் போல தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை வழங்கப்படாது எனத் தெரிகிறது. மாறாக அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்படலாம்.
ராஜா, மீண்டும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆக்கப்படலாம்.
கனிமொழிக்கு மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் (தனி்ப் பொறுப்பு) கிடைக்கலாம்.
இன்று மாலை அல்லது நாளை காலை திமுகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை..
முன்பு டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கிடையாது என காங்கிரஸ் கண்டிஷன் போட்டு வந்தது.
ஆனால் தற்போது திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் அதை ஏற்கத் தயார் என காங்கிரஸ் கூறியுள்ளது.
முன்னதாக, கருணாநிதி நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் சேருவதா, இல்லையா என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் கலைஞர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலையில் முக்கிய முடிவை அவர் அறிவிக்கக் கூடும்.
எங்களது கோரிக்கை 9 அமைச்சர் பதவிதான். ஆனால் காங்கிரஸ் ஏழுதான் தரும் போல் உள்ளது.
முதல் முறையாக எம்.பி ஆகியுள்ளவர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காது. இணை அமைச்சர் பதவிதான் கிடைக்கும் என்றார் அவர். இதன் மூலம் அழகிரிக்கு இணை அமைச்சர் பதவிதான் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து அந்தத் தலைவர் கூறுகையில், கப்பல், தரை வழிப் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது. இருப்பினும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திமுக ஆர்வமாக உள்ளது. எனவே கப்பல் போக்குவரத்துத் துறை திமுக வசம் தரப்படாவிட்டால் அத்திட்டம் கேள்விக்குறியாகி விடும் என திமுக அஞ்சுகிறது.
மத்திய அமைச்சரவையில் திமுக சேர வேண்டும் என்பதுதான் தலைவரின் எண்ணமாக உள்ளது.
அமைச்சரவையில் சேர திமுக முடிவு செய்தால், காங்கிரஸ் தலைவர் ஒருவர் சென்னைக்கு வந்து கலைஞரை சந்திப்பார். பின்னர் கலைஞரும், காங்கிரஸ் பிரதிநிதியும் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications