சம்பளம் கொடுங்க - சத்துணவு ஊழியர்கள் புலம்பல்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஊதியம் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேம்புசாமி தலைமை வகித்தார்.
அப்போது அச் சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் மாதக் கடைசியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால், மாத ஊதியம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோன்றி மலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள சத்துணவு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.
இதனால், குறைந்த ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் சத்துணவு ஊழியர்கள் தினசரி வாழக்கை சூழலில் வாழமுடியாமல் தவி்த்து வருகின்றோம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆணையர், ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஊதியம் வழங்ககப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
கூட்ட முடிவில், மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.