இலங்கையை ஆதரிக்கும் சீனா-இந்தியா
ஜெனீவா: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் இந்த மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் (UNHCR ) இன்று ஜெனீவாவி்ல் நடக்கிறது.
இலங்கையில் இடம் பெயர்ந்து ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இலங்கை ராணுவத்தினரால் தமிழர்கள் பெரும் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தி்ல் சேர்க்க ஆரம்பித்துள்ளனர் என்று கூறியுள்ளது.
இந் நிலையில் இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் 17 நாடுகள் உடனே இதன் கூட்டத்தைக் கூட்டி தமிழர்கள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளன. இந்தக் கோரிக்கையை விடுத்த நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த அமைப்பு இரண்டு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. முதலாவது தீர்மானம் ஸ்விட்சர்லாந்து முன் மொழிந்ததாகும்.
இதன்படி இடம் பெயர்ந்து அரசு முகாம்களில் வசித்து வரும் தமிழர்களுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பதாகும். இதை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆதரித்துள்ளன.
இந்த அனுமதியை இலங்கை அரசு தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்வாது தீர்மானம் இலங்கை அரசே முன் மொழிந்ததாகும். இதன்படி தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும் இதற்கு ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் இலங்கைக்கு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான சீனா ஆதரிக்கிறது. இதாவது பரவாயில்லை. இந்தத் தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிப்பது தான் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு:
இந்தியாவின் இந்தச் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயலின் மூலம் தமிழர்களின் நலனை இந்தியா கை கழுவிட்டதாக அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கையில் நடந்த கடைசி கட்டப் போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல நாடுகள் கோரியுள்ள நிலையில் இந்தியா தன்னை இலங்கைக்கு ஆதரவான நாடாக காட்டிக் கொள்வது கடும் கண்டனத்துக்குரியது.
இலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்றார்.